சனி, அக்டோபர் 13, 2012

சோதனையில் உறுதி.



ஏக இறைவனின் திருப்பெயரால்....

قُل لَّن يُصِيبَنَا إِلاَّ مَا كَتَبَ اللّهُ لَنَا هُوَ مَوْلاَنَا وَعَلَى اللّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ {51}

'அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 9:51


சோதனையில் உறுதி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோதரர் பீ.ஜே அவர்கள் புற்று நோயிலிருந்து பூரண குணம் பெற வல்ல அல்லாஹ்விடத்தில் மக்கள் துஆ செய்து கொண்டு உள்ளனர்.
கடந்த மெயிலில் சகோதரர் பீ.ஜே அவர்களுக்காக துஆ செய்யுங்கள் எனும் தலைப்பில் மாநிலத் தலைமையில் வெளியிட்ட அறிவிப்பை நாம் அனுப்பியதில் ஏராளமான சகோதரர்கள் அவர்களுடைய உடல் நிலை குணமாக துஆ செய்வதாக மெயில் அனுப்பி இருந்தனர்.

பிரச்சாரப் பணி.
சகோ: பீஜே அவர்கள் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் அது மக்கள் மத்தியில் நிலை பெறத் தொடங்கியதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் அமைப்பை நிறுவி அதன் கிளைகளை தமிழகம் முழுவதும் பரவச் செய்து அதன் மூலமாக மக்களுக்கு தங்கு தடையின்றி மார்க்க அறிவு கிடைக்க ஏற்பாடு செய்தார்கள்.

தமிழகத்தைக் கடந்தும்.
தமிழகத்தைக் கடந்தும் கேரளா, கர்நாடகா, மஹாரஸ்டிரா போன்ற மாநிலங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் நிறுவி அங்குள்ள மக்களுக்கும் மார்க்க அறிவு கிடைக்க ஏற்பாடு செய்தார்கள்.

கடல் கடந்தும்.
அரபு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலை தேடிச் சென்ற மக்கள் விடுமுறை தினங்களில் கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் தமிழ்நாடு தஹ்வீத் ஜமாஅத்தின் கிளைகளை நிறுவி மார்க்க அறிவையும், சமுதாய உணர்வையும் ஊட்டச் செய்தார்கள்.

இவ்வாறாக உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் சத்திய இஸ்லாம் சென்றடைய பல வியூகங்களில் வழி வகுத்தார்கள்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.
முஸ்லீமல்லாதோருக்கும் சத்திய இஸ்லாம் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் நிகழ்ச்சியை தொடங்கி தொய்வின்றி நடத்தினார்கள். அது தொடங்கப் பட்ட கால கட்டம் இன்று இருப்பது போல் உள்ள தமிழகம் அல்ல. ஹிந்து மத தீவிரவாதம் தலை விரித்தாடிய கால கட்டம் அது.

ராமகோபாலன் போன்ற விஷமிகளின் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பரப்ப அரசே நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து வந்த காலமது இதனால் இஸ்லாத்தை தெரியாத ஹிந்துக்களுக்கு முஸ்லீம்ளின் மீது வெறுப்பு அதிரித்தது..

பழநிபாபா பதிலடி கொடுத்தார் என்றாலும் அது அந்த விஷமகளின் நச்சுக் கருத்துகளுக்கு தீர்வாக அமைய வில்லை.

எனது மார்க்கத்தில் நீ குறை கண்டு பிடித்ததை விட உனது மதத்தில் ஏராளமான குறைகள் இருக்கிறது பார் என்று பட்டியலிட்டார் இதனால் பதட்டம் அதிகரித்ததேத் தவிற முஸ்லீம்களின் மீதான ஹிந்துக்களின் வெறுப்புக் குறைய வில்லை.  

இஸ்லாத்தில் குறை இல்லை ராமகோபலனின் கருத்துக்கள் அறியாமையின் வெளிப்பாடுகள் சுயமானவைகள், திரிக்கப் பட்டவைகள், இட்டுக்கட்டப் பட்டவைகள் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்க அவரால் முடியவில்லை.

இதற்கு சரியான தீர்வாக அமைந்தது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் மட்டுமே. இதற்குப் பிறகே இஸ்லாத்தின் மீதான ஹிந்துக்களுடைய வெறுப்பு குறைந்தது. இதற்குப் பிறகே ராமகோபாலன் ஹிந்து மக்களிடம் டம்மியாயனார்,

இதற்குப் பிறகே சத்திய இஸ்லாத்தை விளங்கிக் கொண்டு முஸ்லீமல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை நோக்கி அணி வகுத்தனர்.

இந்த முயற்சியே இன்றளவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளில் இஸ்லாத்தை நோக்கி அவர்களை அலை, அலையாய் அணிவகுக்க வழி வகுத்தது

இரு மதத்தவர்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த மதத் தீயை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி தான் தென்றலாய் வீசி அணைத்தது.

பயணுள்ள விவாதங்கள்.
ஆளுக்கு ஆள் தனித் தனியாக அறிக்கை விட்டுக்கொண்டு யார் சொல்வது சரி ? என்றுப் புரியாமல்   மக்கள் தடுமாறிக் கொண்டிருந்ததைப் போக்கும் விதமாக விவாத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அது நாள் கணக்கில் நடந்தாலும், மாதக் கணக்கில் நடந்தாலும் பிரச்சனைகள் எழாதவாறு நெறிமுறைகளை வகுத்து நடத்தி அதன் மூலம் மக்களுடைய உள்ளங்கள் உண்மையை விளங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள்.

தெளிவான  தமிழாக்கம்.
சத்திய வேதம் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்து அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த கால கட்டத்தில் தேவைப்படும் இடங்களில் அறிவியல் தகவல்களையும், வரலாற்று நிகழ்வுகளையும்இடம்பெறச் செய்து படிப்பவர்களின் உள்ளங்களை நிறைவடையச் செய்தார்கள்.

ஆலிமல்லாத  தாஇகள்.
ஆலிம்கள் தான் மார்க்கத்தைப் பேச வேண்டும், பேச முடியும் என்ற நிலையை உடைத்து ஆலிமல்லாதவர்களும் மார்க்கத்தைப் பேச வேண்டும், பேச முடியும் எனும் நிலையை உருவாக்கி ஆலிமல்லாதவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டினார்கள். இன்று ஆலிமல்லாதவர்களும் இந்த அரும் பணிகளை செய்து வருகின்றனர்.  

தனி மரியாதை.
மார்க்க அறிஞர்களுக்கு தனி மரியாதை, தனி உடை, வாசிக்க இயலாத அளவுக்கு நீண்டதொரு பட்டம் என்பதை உடைத்து ஆலிம்களை மக்களுடன் மக்களாக சாதாரண உடை, தனி மரியாதை இல்லை, பட்டம் தேவை இல்லை எனும் நிலையை உருவாக்கினார்கள்.

வரதட்சனை கொடுமை.
வரதட்சனை வன்கொடுமைகளை விளக்கி அது இஸ்லாத்தில் இல்லாத செயல் என்றும், அது மாதர் குலத்துக்கெதிரான தீமை என்பதை பட்டியலிட்டு ஊர் தோறும் பிரச்சாரம் செய்து ஒழித்துக் கட்டினார்கள்.

இரத்த தான முகாம்கள்.
இரத்த தான முகாம்களை உலகம் முழுவதும் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளில் நடத்தச் செய்து உயிர் காக்கும் அரும் பணியை ஏற்படுத்தினார்கள்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலோ, வளைகுடாப் பகுதிகளிலோ குறிப்பிட்டப்பிரிவு இரத்தத்திற்காக ஒரு பெருந் தொகையை செலவிட்டாலும் அதைப் பெற முடியாத நிலை இருந்தது, இன்றைய நிலையோ அவ்வாறில்லை ஆங்காங்கே இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையை தொடர்பு கொண்டால் தாமதமின்றி குறிப்பிட்டப் பிரிவு இரத்தத்தைப் பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று அறியாமல் வெளிநாட்டு மோகத்தில் இருந்த மக்கள் மத்தியில் இட ஒதுக்கீடுப் பெற்று அரசு வேலைகளில் அமருவதன் அவசியத்தை விளக்கி பட்டி தொட்டிகளிலெல்லாம் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு இன்று மக்களை வெளிநாட்டு மோகத்திலிருந்து மீட்டெடுத்து கல்வி பயிலும் நிலைக்கு ஆளாக்கினார்கள். தொடர்நது போராட்டங்கள் நடத்தி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றும் கொடுத்தார்கள்.

வாக்கு மீறவில்லை.
அரசியலில் நுழைய மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதியை கடைசி வரை மீறவில்லை

தனக்குப் பிறகும்.
தனக்குப் பிறகும் இந்த அரும் பணிகள் தொய்வின்றி தொடருவதற்காக  தான் வாழும் காலத்திலேயே இதன் பிரச்சாரத்திற்கு தகுதியான பேச்சாளர்களை உருவாக்கி நிர்வாகத்தை இயக்கத் தகுதியான நிர்வாகிகளை உருவாக்கி இப்பொழுதே பிரச்சார களத்திலும், நிர்வாகத்திலும் இறக்கி விட்டார்கள் அவர்களும் மார்க்கப் பிரச்சாரம், சமுதாயப் போராட்டங்கள், விவாதங்களில் இறங்கி வெளுத்துக் கட்டத் தொடங்கி விட்டனர்.

அண்ணன் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த அரும் பணிகள் தொய்வின்றி தொடரும் எனும் நம்பிக்கையை அண்ணன் அவர்களுக்கு இந்த இளம் தாஇகள் ஊட்டி விட்டனர்.

வல்ல அல்லாஹ் இவர்களின் பாதங்களை உறுதி ப்படுத்தி இந்த களத்தில் நின்று எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் செயலாற்ற அருள் புரிவானாக !

இவ்வாறு மக்கள் ஏராளமான நன்மைகளை அடைய வழிவகுத்தார்கள் அவர்களுடைய கரங்கள் அண்ணன் அவர்களுடைய நோயை அறிந்து வானத்தை நோக்கி அல்லாஹ்விடம் தாமாக இறைஞ்சத் தொடங்கும். இறைஞ்சிக் கொண்டிருக்கின்றன.

நஷ்டமடைந்தோர்.
ஆனால் அண்ணன் அவர்களுடைய பிரச்சாரத்தால் ஒரு சாரார் நஷ்டமடைந்தனர் அவர்கள் யார் என்றால்

ஏக இறைவனுக்கு இணை வைக்கும் ஆலயங்களை உருவாக்கி உண்டியல் வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்.

இறந்தவர்களுக்காக  ஹத்தம், ஃபாத்திஹா ஓதிப் பிழைப்பு நடத்தியவர்கள்.   

அபிவிருத்திக்காக வீடுகளிலும், கடைகளிலும் சென்று மௌலூது ஓதிப் பிழைப்பு நடத்தியவர்கள்.

கண் திருஷ்டிக்காக, பேய் பிசாசுகளை விரட்டுவதற்காக  தாயத்துகளையும், தட்டுகளையும் எழுதிக்கொடுத்து ப் பிழைப்பு நடத்தியவர்கள்.  

இவர்களில் அதிகமானவர்கள் சகோ: பீஜே அவர்களுடைய ஏகத்துவ பிரச்சாரத்தால் வருமானம் குறைந்து பிழைப்புகளைத் தேடிச் செல்லும் நிலை உருவாகி விட்டதால் அவர்களாலும், மத்ஹபு வாதிகளாலும் சகோ: பீஜே அவர்களுக்கு வந்திருக்கக் கூடிய புற்று நோயைப் பற்றி ஃபித்னா உருவாக்கலாம்

அல்லாஹ்வின் சிறந்த நேசர்.
தவ்ஹீதை ஏற்றுக் கொண்ட மக்கள் கேட்கக் கூடிய துஆவினால் வல்லமைப் பொருந்திய அல்லாஹ் நாடினால் அண்ணன் அவர்களை நோயிலிருந்து குணப்படுத்தி வடுவான்.

இல்லை என்றால் இவைகளை ஒழித்துக் கட்டி சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை நிருத்தியதற்காக அல்லாஹ்வின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள். 

'ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5023

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5030

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! திருக்குர்ஆன். 2:155.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். திருக்குர்ஆன். 2:156.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். திருக்குர்ஆன். 2:157.

சகோ: பீஜே அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் இதன் மூலம் கழுவி தூய்மையாக்கப்பட்ட நிலையில் அவர் இறையடி செல்வார்.

இதன் மூலம் அவர் செய்த பிரச்சாரத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் இதன் மூலம் அவர் செய்தது சத்திய பிரச்சாரம் தான் என்பது மார்க்க அறிவு கிடைக்கப் பெற்ற மக்கள் அறிந்து கொள்வார்கள்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்  3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை .எம்.ஃபாரூக்